பாதி மதிநதி
(சுவாமிமலை)
தான தனதன தான தனதன
தான தனதன ...... தனதான
பாடல்
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய ...... குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய ...... மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு ...... மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட ...... அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு ...... சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு ...... மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி ...... லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல ...... பெருமாளே.
சொல் விளக்கம்
பாதி மதிநதி போதும் ... பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும்,
கொன்றை மலரையும்
அணிசடை நாத ரருளிய குமரேசா ... அணிந்த சடைப் பெருமான்
சிவபிரான் அருளிய குமரேசனே,
பாகு கனிமொழி மாது ... சர்க்கரைப் பாகும், கனிகளும் போன்ற
இனிய மொழியை உடைய மாதரசி,
குறமகள் ... குறமகளாகிய வள்ளியின்
பாதம் வருடிய மணவாளா ... பாதத்தைப் பிடித்துவிடும் மணவாளனே,
காது மொருவிழி காகமுற அருள் ... பிரிக்கப்பட்ட ஒரு விழியை*
காகாசுரன் என்னும் காகம் அடையும்படி அருளிய
மாயன் அரி திரு மருகோனே ... ஸ்ரீராமர் மாய ஹரிக்கும்,
லக்ஷ்மிக்கும் மருமகனே,
காலனெனை யணுகாமல் ... யமன் என்னை அணுகாத வகைக்கு
உனதிரு காலில் வழிபட அருள்வாயே ... உன் இரு திருவடிகளில்
வழிபடும் புத்தியை அருள்வாயாக.
ஆதி யயனொடு தேவர் ... ஆதி பிரமனோடு அமரர்கள் அனைவரும்
சுரருலகு ஆளும் வகையுறு சிறைமீளா ... தேவலோகத்தை
ஆளும்படி சிறையினின்று அவர்களை மீட்டவனே,
ஆடு மயிலினி லேறி ... நடனம் ஆடும் மயில் மீது ஏறி
அமரர்கள் சூழ வர ... தேவர்கள் உன்னைச் சூழ்ந்துவர
வரும் இளையோனே ... வருகின்ற இளையவனே,
சூத மிகவளர் சோலை ... மாமரங்கள் மிகுந்து வளர்ந்த சோலைகள்
மருவு சுவாமிமலைதனில் உறைவோனே ... நிறைந்த
சுவாமிமலையில் வீற்றிருப்பவனே,
சூர னுடலற ... சூரனின் உடல் வீழ,
வாரி சுவறிட ... கடல் வற்றிப்போக,
வேலை விடவல பெருமாளே. ... வேலினைச் செலுத்தவல்ல
பெருமாளே.
Негізгі бет 34. பாதிமதிநதி - சுவாமிமலை திருப்புக ழ்
Пікірлер: 75