அஷ்ட காளிகள்
அசுரர் குலத்துபெண் தானாவதி தனக்கொரு ஆண்வாரிசு வேண்டும் என்று பிரம்மனை நோக்கித்தவம் இருந்தாள். தானாவதியின் கடும் தவத்தினை கண்ட பிரம்மன் அவள் முன்தோன்றி, தானாவதி கேட்ட வரத்தைக் கொடுத்தார். வரத்தின் பயனாக தானாவதிக்கு மகனாக தானாசுரன் பிறந்தான். அவன் எருமைத் தலையுடன் இருந்ததால் மகிஷாசுரன் என அழைக்கப்பட்டான்.
வேதங்களையும், அனைத்து கலைகளையும் கற்றுணர்ந்த மகிஷாசுரன், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். மகிஷாசுரனின் தவத்தைக்கண்ட சிவபெருமான் அவன் கேட்ட வரங்களையெல்லாம் கொடுத்தார். வரங்களைப்பெற்ற மகிஷாசுரன் ஊர்வன, பறப்பன உள்ளிட்ட எந்த இனத்தாலும் எனக்கு மரணம் வரக்கூடாது. பெண் வயிற்றில் பிறக்காத பெண்ணால் மட்டுமே எனக்கு மரணம் நேரவேண்டும் என்று வரம் கேட்டான். அதனைக் கேட்ட சிவபெருமான் அப்படியே ஆகட்டும் என்றார்.வரங்களைப் பெற்ற மகிஷாசுரன் தனக்கு மரணம் நேர வாய்ப்பே இல்லை என்ற ஆணவத்தில் தான் ஆண்டு வந்த மகேந்திர கிரிபர்வதம் பகுதியில் தான் எண்ணியபடி ஆட்சி புரிந்தான்.(மகேந்திர கிரிபர்வதம் தற்போதைய மைசூர்) (மகிஷன் ஆண்ட ஊர் என்பதால் மகிஷாஊர் என்று அழைக்கப்பட்டது.
அதுவே மருவி மைசூர் என்றானது)மகிஷாசுரனின் கொடுமைகளை பொறுத்துக்கொள்ள முடியாத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். இதனிடையே கயிலாய மலையில் பார்வதிதேவி, விநாயகர், முருகன் சகிதமாக சிவனுடன் இருக்கையில், விநாயகப்பெருமான், அன்னை சக்தியிடம்‘‘தாயே, தந்தை ஏன் கண்களை திறந்தபடி தியானம் செய்தார், தியானம் என்றாலே கண்களை மூடித்தானே செய்யவேண்டும் என்று வினா தொடுத்தார்.’’ அதற்கு பார்வதிதேவி ‘‘தந்தையின் கண் ஒளியினால் தான் அண்ட சராசரங்கள் இயங்குகிறது. அவர் கண்களை மூடினால் அகிலமும் இருட்டாகும்’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட முருகன் ‘‘தாயே, அப்படியென்றால் தந்தை ஒரு முறை கண்களை மூடிக்காட்டட்டும் பார்ப்போம்’’ என்றார்.
‘‘இதை எப்படி தந்தையிடம் கூற, என்று முருக பெருமான் கேட்க, அவரிடம் சொல்ல வேண்டாம், அதை நானே செய்கிறேன் என்று கூறியபடி, பார்வதிதேவி, தியானித்துக் கொண்டிருந்த சிவபெருமானின் கண்களை, தனது கரங்களால் மூடினார். மறுகனமே அகிலமும் இருளில் மூழ்கியது. உடனே சக்தியின் கரங்களை விலக்கிக்கொண்டு கண்ணை திறந்தார் சிவன்.‘‘என்ன விளையாட்டு இது’’ சினம் கொண்டார் சிவன். பணிந்தார் பார்வதிதேவி, ‘‘சுவாமி, பிள்ளைகள் கேட்டதற்காகச் செய்தேன். தாங்கள் பொறுத்தருள வேண்டும்’’ என்றார். இந்த செயலுக்காக நீ வருந்தியே ஆக வேண்டும் என்ற சிவன், நாகக்கன்னியின் வயிற்றில் அஷ்டகாளியாக பிறக்க வேண்டும் என்று சபித்தார்.
இந்த சிறிய தவறுக்கு மானிட பிறப்பா, அதுவும் நாகத்தின் வழியாகவா! என்று வருத்தமுற்ற பார்வதி தேவி, அவ்விடத்திலிருந்து எழுந்து நகர முற்பட்டார். அப்போது சிவபெருமான் கடுஞ்சினம் கொண்டு நெற்றிக் கண்ணை திறந்தார். அதிலிருந்து வெளியான தீப்பிழம்புகள் பார்வதிதேவியின் மேனியை எட்டு பிண்டங்களாக்கின. அந்த எட்டு பிண்டங்களையும் கையில் எடுத்துக்கொண்டார் சிவன்.பாதாளலோகத்தில் நாகக்கன்னி மழலை வரம் வேண்டி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தாள். அவள் முன்தோன்றிய சிவன், தன்னிடமிருந்த எட்டுப் பிண்டங்களையும் சாப்பிடுமாறு கொடுத்தார். அதை உண்ட நாகக்கன்னியின் வயிற்றில் அது எட்டு முட்டைகளாக உருமாறி வெளிவந்தன. நாகக்கன்னி அந்த எட்டு முட்டைகளையும் அடைகாத்து வந்தாள். 41வதுநாள் ஆடிமாதம் பூரம் நட்சத்திரத்தன்று செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எட்டு முட்டையிலிருந்து எட்டு பெண் குழந்தைகள் பிறந்தன.
முதலாவதாக பிறந்தாள் முத்துமாரி என்ற மாரிமுத்தாரம்மன், இவளை முத்தாரம்மன் என்றும் பகர்தர்கள் அழைப்பதுண்டு.இரண்டாவதாக பிறந்தாள் பத்திரகாளி. இந்த அம்மையை வீரமனோகரி, வீரம்மன், எல்லைக்காளி, எல்லையம்மன்.
மூன்றாவதாக மூன்று முகத்துடன் பிறந்தாள் முப்பிடாதி (பிடாரி, பிடதி என்றால் தலை என்று பொருள்). மூன்று தலைகள் இருந்ததால்
முப்பிடதி, முப்பிடரி என்று அழைக்கப்பட்டது, இதுவே மருவி முப்பிடாரி என்றும் முப்பிடாதி என்றும் அழைக்கப்படலாயிற்று. இத்தாயவளை முத்தாலம்மன் என்றும் அழைப்பர். மூன்று தலைகள் கொண்ட அம்மன் என்பதாலே மூன்றுதலையம்மனே முத்தலையம்மனாக, முத்தாலம்மனாக அழைக்கப்படலானாள். இந்த அம்மனே பிடாரி அம்மன், எல்லைப்பிடாரி என பல்வேறு நாமங்களில் அழைக்கப்படுகிறாள்.
நான்காவதாக பிறந்தாள் உலகளந்தாள் என்ற உலகமாதா, இவளை உலகநாயகி என்றும் இத்தாயவள் துளிர்க்காத வனத்தில் அமர்ந்ததால் துலுக்கானத்தம்மன் என்றும் இவளை அழைப்பதுண்டு. பொன்னிறத்தில் ஜொலித்ததாலே பொன்னி அம்மன் என்றும் அழைக்கப்பட்டாள்.
ஐந்தாவதாக பிறந்தாள் அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி, அன்னை இவளே நாகாத்தம்மனாகவும், நாகவல்லியாகவும் அழைக்கப்படுகிறாள்.
ஆறாவதாக பிறந்தாள் செண்பகவல்லி என்ற வடக்குவாசல்செல்வி, அன்னை இவள் செல்லியம்மன் என்றும் அழைக்கப்படுகிறாள். இந்த அம்பாளை படை வீரர்கள் வழிபட்டு வந்தனர். இதனால் இத்தாயவளை படைவீட்டம்மன் என்றும் அழைப்பர்.
ஏழாவதாக பிறந்தாள் சந்தனமாரி. இவளே சடைமாரி, ஆகாசமாரி என அழைக்கப்படுகிறாள். எட்டாவதாக பிறந்தாள் காந்தாரி.
மகிஷாசுரமர்த்தினி
நாகலோகத்தில் நாகக்கன்னி பிள்ளைகள் எட்டு பேரையும் அன்போடும், அரவணைப்போடும் வளர்த்து வந்தாள். வளர்ந்து வந்த பிள்ளைகள் கன்னியர் ஆகினர். அம்மா, எங்கள் முகமும் உங்க முகமும் வேறுபட்டு உள்ளதே என்று கேள்வி எழுப்ப, எல்லாம் அந்த சிவனார் செயல் என்றாள் நாகக்கன்னி. உடனே சிவனிடம் எங்களை ஏன், தாயைப் போல் படைக்காமல் மனிதகுல பெண்களாக படைக்க வேண்டும். இந்த நாகலோகத்தில் மனித பிறப்பு எடுத்து என்ன பயனைப் பெறப்போகிறோம்.
அதை அந்த சிவனிடமே கேட்போம் என்று கூறி, அக்காள் தங்கை எட்டு பேரும் சிவலிங்கத்தை வைத்து பூஜித்து சிவனை நோக்கி தவமிருந்தனர். அவர்களின் தவத்தைக்கண்ட சிவன் அவர்கள் முன்தோன்றினார். அஷ்டகாளிகள் சிவனிடம் தங்களின் பிறப்பு குறித்து கேட்க, சிவனும் பதில் கூறினார்.
#Amman_kathai
#villupattu
#அம்மன்_வரலாறு
#அம்மன்_வில்லுபாட்டு
Негізгі бет Ойын-сауық அஷ்டகாளிகள் பிறந்த கதை வில்லுபாட்டு|லலிதா குமாரி வில்லிசை|அட்டகாளி 8 பேர் கதை|அம்மன் கதை|
Пікірлер: 15