அங்காரகன் எனும் செவ்வாய் பகவன், பூமித்தாயால் வளர்க்கப்பட்டதால் பூமிகாரகன் என்றும் பூமிபுத்ரன் என்றும் போற்றப்படுகிறார். அவர் சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியதால் அக்னி வர்ணமாகக் காட்சி அளித்தார். அவரது மனைவி சக்தி தேவி எனவும் அவருக்கு உரிய நாளாக செவ்வாய்க்கிழமையும் விளங்குகிறது.
திருப்போரூர் எனப்படும் சமராபுரிப் பட்டணத்தில் வான்வழிப் போர் புரிந்து ஒரு முகூர்த்த காலம் குன்றத்தூர் மலையில் கால் வைத்து நின்று திருத்தணிக்குச் சென்றார் செவ்வேள். அவ்வாறு சென்றவரை அவசரமாகக் காண ஓடிவந்தார் நக்கீரர். முருகன் கிளம்பிச் சென்று விட்டதை அறிந்து முடிந்தவரை பின் தொடர்ந்தார். ஒரு நீர் நிலைக் கரையை அடைந்தார் நக்கீரர். அதன் வளத்திலும் செழிப்பிலும் மனம் பறிகொடுத்தவராய் அதன் கரையில் அமர்ந்து முருகனைக் காண வேண்டி தவம் செய்யத் துவங்கினார்.
திருத்தணியிலிருந்த முருகன் நக்கீரர் தவத்துக்கு மெச்சி ஏரிக்கரையில் வள்ளி தெய்வானையுடன் மணக்கோல முருகனாக காட்சி தந்தார். நக்கீரரோ, "முருகா புழல் என்னும் இத்தலத்தில் உன் அவதார நோக்கம் வெறும் எனக்குக் காட்சி அளித்ததாக மட்டும் இருக்கக்கூடாது. செவ்வேள் என்னும் உன் பரந்த கருணையால் உன் பக்தர்கள் பலன் அடையும் வகையில் நீ இருக்க வேண்டும். கலியுகத்தில் பக்தர்களுக்கு ஏற்படும் அங்காரக தோஷத்தை நீக்க வேண்டும்' என வேண்டினார். "அவ்வாறே நடக்கும்' என்று அருள் மொழி கூறி மறைந்தார் முருகப்பெருமான்.
முருகர், அங்காரகனை அழைத்து உலக நலன் வேண்டி யாம் இந்த நீர்க் கரையில் காட்சி தந்து அருளப் போகின்றோம், நீரும் எமக்குத் துணையாக இங்கு எழுந்தருளி வந்து பக்தர்களுக்கு அல்லல் நீக்கி அருள் வழங்கிட வேண்டும்' எனக் கூறினார். அவ்வாறே தானும் முருகனுடனிருந்து மக்களுக்கு அருள்கின்றார் அங்காரகன். சோழர் கால கல்வெட்டுகள் ஜெயம்கொண்ட சோழ மண்டலத்து புழற்கோட்டம் என குறிப்பிடுகின்றன.
புழல் அருள்மிகு வள்ளி தேவசேனா உடனுறை சுப்ரமணியசுவாமி திருக்கோயில் மற்றொரு முக்கியமான வரலாற்றுச் சிறப்பு மிக்க அருள்மிகு திருமூலநாதர் திருக்கோயிலுக்கு வெகு அருகில் சுமார் 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கருங்கல் கருவறை அமைந்த திருக்கோயிலாகும். நுழைவு வாயில் தாண்டியதும் ஒரு வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பலிபீடம் கொடிமரம் மயில் வாகனம் முன் மண்டபம் அர்த்த மண்டபமும் கருவறை என அமைந்துள்ளது. கருவறையில் வள்ளி தெய்வானையுடன் சுமார் 5 அடி உயரத்துக்கு மேல் அருள் வழங்கும் சுப்ரமணியர் துணைவியருடன் கிழக்கு நோக்கி நின்ற திருமணக்கோலத்தில் காட்சி தருகின்றனர்.
வெளி மண்டபத்தில் சூரியன், சந்திரன், தெற்கு பார்த்து அருளும் ஆறுமுகர் சந்நிதி, வெளிப் பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், மஹாதேவர் என்ற பெயருடன் லிங்க வடிவில் சிவன், உமாமஹேஸ்வரி அம்பாள் சந்நிதிகள் அமைந்துள்ளன. நவக்கிரக சந்நிதியும் அமைந்துள்ளது. கோயில் அருகிலேயே சரவணப்பொய்கை என்னும் தீர்த்தம் அமைந்துள்ளது. ஆறுமுகர் சந்நிதிக்கு பின்புறம் அங்காரகன் சந்நிதி உள்ளது.
ஒன்பது கிரகங்களில் கேட்டவுடன் பலனை அள்ளி வழங்குபவர் செவ்வாய் மட்டுமே ஆகும் ஏனென்றால் செவ்வாய்கிரகம் ஓர் அக்னி கிரகம் அது மிகவும் வீரியத் தன்மை வாய்ந்த கிரகம். செவ்வாயின் கடவுளாகிய முருகனிடம் ஏதேனும் ஒரு வேண்டுதல் வைத்தால் காரியம் நிச்சயம் நடந்தேறும். செவ்வாய்தோஷம் இருந்தால் ஒன்பது வாரம் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தால் விரதத்தின் தன்மை பொறுத்து தோஷம் நீங்கி நல்லது நடக்கும். இத்திருக்கோயிலில் அங்காரகன் (செவ்வாய்) தோஷம் நிவர்த்தி அடைய ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையில் அங்காரகனுக்கு என சிறப்பு அர்ச்சனைகள் பரிகாரத்திற்காக நடத்தப் பெறுகின்றன. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கல்யாண சுப்ரமணியரை தரிசனம் செய்தால் திருமணம் கைகூடி வரும் என்பது நம்பிக்கை.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கல்யாண சுப்ரமணிய சுவாமிக்கு ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு எதிர்வரும் 28.7.2016 அன்று காலை புழல் ஏகவல்லி அம்மன் கோயிலில் இருந்து காலை 8.30 மணி அளவில் பக்தர்கள் பால்குடம் எடுக்கும் விழா நடைபெறுகின்றது. காலை 10.30 மணிக்கு பால்குட அபிஷேகமும் அன்னதானமும் மாலை 5.30 மணிக்கு உள்புறப்பாடும் நடைபெற உள்ளது.
சென்னையை அடுத்துள்ள புழல் தேசிய நெடுஞ்சாலையில் சிறைச்சாலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி காந்தி தெரு வழியாக சிவன்கோயிலை அடைந்தால் எதிரில் உள்ள ஒத்தவாடைத் தெருவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஒரு கி.மீ நடந்தோ ஆட்டோவிலோ செல்லலாம்.
Негізгі бет செவ்வாய் தோஷ நிவர்த்தி ஸ்தலம்|PUZHAL MURUGAN TEMPLE| SEVVAI DHOSHAM PARIKARA STHALAM
Пікірлер: 2