உலக வாழ்வை மறுமையின் விளைநிலமாக பயன்படுத்தி கொள்வது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். இதன் நிமித்தம் நல்லவைகளை விதைத்து, நன்மைகளை அறுவடை செய்து, மறுமையில் சுவர்க்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.இது தான் மனித வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க வேண்டும். அல்லாஹ் ஒருவன் தான் வணக்கத்திற்குரியவன் என்று உறுதியாக நம்ப வேண்டும். அவன் வகுத்து தந்த தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ் போன்ற கடமைகளை தவறாமல் நிறைவேற்ற வேண்டும். மேலும் பிற மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் பலன் தரும் வகையில் தனது சொல்லையும், செயலையும் அமைத்துக் கொள்ளவேண்டும்.
அந்த வகையில் பிறரின் குறைகளை மறைப்பதும், பிறரின் தீமைகளை மன்னிப்பதும் சுவர்க்கம் செல்ல சுலபமான வழி என்பதை இதன்மூலம் எம்மால் அறிந்து கொள்ளலாம்.
அதேபோன்று, பிறரை உயர்வாக கருதும் எண்ணம் சுவர்க்கத்தை பெற்றுத் தரும். ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, நான் இப்போது உங்களுக்கு இறைவனால் சுவர்க்கவாதி என்று அறிவிக்கப்பட்டவரை அடையாளம் காட்டவா? என்று வினவினார்கள். அதற்கு தோழர்கள் ஆவலுடன் ஆம் என்றனர். அப்போது நபிகளார், இப்போது ஒருவர் நம்மை கடந்து செல்வார், அவர்தான் அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட நல்லடியார் என்று கூறினார்கள். அப்போது ஒருவர் இடது கையில் தன் காலணிகளை பிடித்தவராக ‘வுழு’ செய்த தண்ணீர் தாடியிலிருந்து வழிந்தோடிய வண்ணம் அக்கூட்டத்தை கடந்து சென்றார். நபித்தோழர்களில் ஒருவருக்கு, எந்த நல்ல செயலின் காரணமாக இத்தகைய உயர்ந்த அந்தஸ்த்தை அவர் பெற்றார் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. அவரிடம் சென்று, ‘உங்களுடன் இரண்டொரு நாட்கள் தங்க வேண்டும். அதற்கு அனுமதி தருவீர்களா? என்று கேட்டார். அவர் சம்மதம் தெரிவித்த பின்னர் அவருடன் தங்கி அவரது அன்றாட நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்தார். அப்போது அவரிடம் எந்த விதமான சிறப்பான நற்செயல்களையும் அவரால் கண்டுகொள்ள முடியவில்லை. எனவே அவரிடமே கேட்டார், ‘நாங்கள் செய்வது போன்றுதான் தொழுகை மற்றும் அன்றாட கடமைகளைத்தான் நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் ‘நீங்கள் சுவர்க்கவாதி’ என்பதாகக் கூறினார்கள். அத்தகைய உயர்ந்த அந்தஸ்த்தை பெறுவதற்கு நீங்கள் என்ன நற்செயல்களைச் செய்கிறீர்கள்? என்று அறிந்துகொள்ளவே உங்களுடன் தங்கினேன்’ என்றார்.
அதற்கு அவர், ‘நான் எல்லோரையும் போலத்தான் எனது கடமைகளைச் செய்கிறேன். ஆனால் என்னிடம் ஒரு குணம் உண்டு. எந்த சகோதர மனிதனையும் என் மனதளவில்கூட தாழ்வாக என்றுமே எண்ணுவதில்லை. ஒருவேளை அதுதான் எனக்கு சிறப்பை பெற்றுதந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்’ என்று பதில் கூறினார்.
(ஆதாரம்-: நபிமொழி)
ஒரு மனிதன் பிறருக்கு செய்த தீங்கை, பாதிப்புக்குள்ளானவர் மன்னிக்காதவரை அல்லாஹ்வும் மன்னிப்பதில்லை’ என்று அல் குர்ஆன் குறிப்பிட்டுள்ளது. அதேநேரத்தில், சக மனிதர்கள் செய்த தீமையை மன்னித்து விட்டால் அதற்கு பிரதியாக இரட்டிப்பாக கூலியைத் தருகிறேன் என்றும் அல்லாஹ் கூறியுள்ளான்.
Негізгі бет சுவர்க்கம் நமக்கானதா | அதற்காக என்ன செய்ய வேண்டும் | Adhil hasan bayan | 2024 | Part-1
Пікірлер: 4