மனம்
' எது நடந்தாலும் ... மனசை மட்டும் வுட்டுடாதய்யா ' என்று, எங்க ஆத்தா (அப்பாவின் அம்மா - கோ. ராசாம்பாள், பூர்வீகம் : சாயாவனம்) சொல்வார்கள்.
எண்ண அலைகளின், ஏற்ற இறக்கங்களுக்கு ஆட்பட்டு நேர்மறை, எதிர்மறை எண்ணங்களை, வடிவமைப்பது மனம்.
அம்மனதை, நிலைநிறுத்தி சமன் செய்வது, ஐம்புலன்களின் உணர்வு. அப்புலன்களில் மென்மையானதும், மேன்மையானதும், படைப்பில் நிறைவாகப்பெற்றதும் செவிப்புலனே.
இசையே, அச்செவிவழி பெறுபவைகளை சமன் செய்கின்றது.
மனதை சமன்செய்ய, இசையை அடிக்கடி கேட்பதென்பது அத்யாவசியமாகிவிட்டது.
இசைப்பதற்கு எண்ணற்றவைகளிருந்தாலும், அசுரவாத்தியமான நாகஸ்வரமே, முதன்மையாக கருதப்படுகின்றது.
பத்து நிமிட, இப்பதிவிலுள்ள, இஞ்சிக்குடி சகோதரர்களின் நாகஸ்வரத்திலிருந்து பிறக்கும் ராகங்கள், புலன்களின், புலம்களை புலப்படுத்துகின்றன. பொழுதுகளின், தன்மைகளை உணர்த்துகின்றன. வானவில் போன்று வண்ணங்களை வகைப்படுத்தி காட்சிப்படுத்துகின்றன. மனத்தை நெறிப்படுத்துகின்றன. மனம் செம்மையாகின்றது.
' மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா ' என்பது அகத்தியர் வாக்கு.
அப்பாவின் சாயலில் உள்ள பெட்டிக் கடைக்காரரிடம், சிகரெட் வாங்கும்போதெல்லாம் விரல்கள் நடுங்கின்றன! என்பார், கவிஞர் நா. முத்துக்குமார்.
நாகஸ்வரம் வாசிப்பவர்களை காணும்போது, மரியாதையை கூடுகின்றது.
எல்லோருமே, எனது தந்தையாகவே தெரிகின்றனர். படுத்த படுக்கையில்கூட எனது தந்தையிடம் எதிரே, நேரில் நின்று பேசியதில்லை. இந்நிலையினைத்தான், இஞ்சிக்குடி சகோதரர்களிடம் நான் பின்பற்றுகின்றேன்.
இப்பதிவை நேரடியாக, நான் பதிவு செய்துமுடித்தவுடன், உடன் வாசித்த தவில் கலைஞர் எழுந்து, சாஷ்டாங்கமாக வணங்கினார். பதிவு செய்யும்போதும், நான் மீண்டும் மீண்டும் கேட்கும் பொழுதெல்லாம் எனக்குள்ளும், இது நிகழ்துகொண்டேயுள்ளது.
கண்களை மூடி, இப்பதிவின் ஒலியினை உள்வாங்கும்போது, ஒவ்வொரு ராகமும், ஒவ்வொரு பொழுதோடு உங்களை பொருத்தி, மனக்கண் விரியும்.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ... திருமந்திரச்சொல்.
இசைஞானி இளையராஜாவின் வாக்கு, நாகஸ்வரம் ‘ சிவன் சொத்து ‘.
_ வில்வம் கோடிசுந்தரம்
Негізгі бет Nagaswaram - Ragamala - Injikudi Brothers - E.M. Subramaniyan & E.M. Mariyappan
Пікірлер: 49