Thirumoolar Thirumanthiram, Tirumantiram, திருமூலர் அருளிய திருமந்திரம், கள்ளுண்ணாமை, Kallunnamai
திருமூலர் சித்தர் தனது திருமந்திரத்தில். "கள்ளுண்ணாமை" என்ற அதிகாரத்தில் 13 பாடல்களாக உபதேசித்துள்ளார், கள் என்றால் போதை தரும் எல்லாப் பொருள்களும் அடங்கும்.
திருமந்திரம் - 324
கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தம் காயம்சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்தன் சிவானந்தத் தேறலே
விளக்கம்:
அரிசி கழுவிய நீரை பசுவுக்குக் கொடுத்தால் அதைக் குடித்துப் பழகிய பசு அதற்குப் பிறகு குளங்களைத் தேடிச் சென்று நல்ல நீரைப் பருகாது. தாகம் எடுத்தாலும் எளிதாக கிடைக்கும் நல்லநீரை குடிக்காமல் அரிசி கழுவிய கழுநீருக்காக காத்திருந்து அந்தப் பசுக்கள் தங்களது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளும். அதுபோலவே உடலையும் உணர்வையும் சுருக்கி போதை தரக்கூடிய மதுவைக்
தனக்கு தேவையான எல்லாமே இருப்பதாக நினைத்து, குடித்துப் பழகிய மனிதர்கள் ஒழுக்கத்திலிருந்து விலகி, அறமுறையும், அருள் முறையும் அகன்று பாவநெறியிற் செல்வோராவர், அவர்கள் உயர்வு தரும், உண்மையான இன்பம் மிகுந்த சிவானந்தத் தேனை அறியாமல் வாழ்க்கையை வீணாகக் கழிக்கின்றனர்.
திருமந்திரம் - 325
சித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில்
ஒத்த சிவானந்தம் ஓவாத தேறலைச்
சுத்த மதுவுண்ணச் சிவானந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க் காலே
விளக்கம்:
உயிர்கள் வெளியுலக எண்ணங்களை முழுமையாக நீக்கிவிட்டு இறைவனின் மேல் சிந்தனையை வைத்து யோகத்தில் சிவமாக இருக்கும் சமாதி நிலையில் குண்டலினி சக்தியை சுழுமுனை நாடி வழியே மேலேற்றி சகஸ்ரரதளத்தில் சேர்த்தால் அங்கே ஊறும் மிகவும் தூய்மையான சிவானந்தம் என்னும் மது தொடர்ந்து ஊறும், அந்த அமிர்தத்தைப் பருகி பேரானந்தத்திலேயே இருப்பதை விட்டுவிட்டு புத்தியை மயக்கும் மது போன்ற போதை வஸ்துகளை பருகி அந்த மயக்கத்தில் இருப்பதும், சுய நினைவின்றி செயலற்றவராய் மயங்கிக் கிடப்பதும் நம்மை இழிவு நிலைக்கு அழைத்துச் செல்லும்.
திருமந்திரம் - 326
காமமும் கள்ளும் கலதிகட் கேயாகும்
மாமல மும்சம யத்துள் மயலுறும்
போமதி யாகும் புனிதன் இணையடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே
விளக்கம்:
காமமும் போதை தரும் மதுவும் கீழ்த்தரமான மனிதர்களுக்கே உரியது. மதுவினால் மிகப்பெரிய அழுக்காகிய ஆணவம் அதிகரிக்கும். ஆணவம் மிகுந்தால் நம்மையே உணர முடியாத அளவுக்கு அறிவு எல்லா நேரத்திலும் மயங்கி கிடக்கும். நாளடைவில் அறிவு அழிந்தே போகும். எப்போதும் பேரானந்த உணர்வைத் தரும் இறைவனின் திருவடிகள் போலவே பேரானந்தத்தைத் தரும் அமிர்தத்தைப் பெற்று அருந்துவது மேன்மையான மனிதர்கள் செய்யும் செயலாகும். நாம் உணர்ந்து பருக வேண்டிய மது இதுவே ஆகும்.
திருமந்திரம் - 327
வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்
காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே.
விளக்கம்:
தீவினையைச் செய்பவர்கள் தமக்கும் தீயதாகிய மதுவைக் குடித்து குடித்து சீக்கிரம் அழிந்து போவார்கள். காம எண்ணம் கொண்டவர்கள் அந்தக் காமத்தையே மதுவாகக் குடித்து அதிலேயே மயங்கிக் கிடந்து மிகுந்த துன்பத்துக்கு ஆளாவார்கள். அப்படி இல்லாமல் தவ வழியில் நமக்குள்ளே தோன்றும் உள்ளொளியில் ஒரு மது ஊறும். இறைவனது திருநாமத்தை மட்டுமே எப்போதும் சிந்தித்து ஓதிக்கொண்டே இருப்பவர்கள் இறைவனோடு பேரானந்தத்தில் கலந்து இன்பம் பெறுவார்கள்.
திருமந்திரம் - 328
உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வுறார்
தெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே
விளக்கம்:
புத்தியை மயக்கும் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் வேதங்களின் கருத்தை அறிய மாட்டார்கள். இறைவனை அடையும் வழிகளைச் சொல்லும் வேதங்களின் கருத்தை அறிய மாட்டார்கள். பதி, பசு, பாசம் என்பவற்றில் உள்ள உட்பொருளை அவர்கள் உணர்வதில்லை. உயிர்களுக்கு பெருங்கருணையோடு அருளை வாரி வழங்கும் வள்ளலாகிய இறைவனின் அருள் பெற்று வாழும் பேரானந்த வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள், அறிவிற்கு தெளிவைக் கொடுக்கும் உண்மையான ஞானத்தைத் தரும் சிவயோகம் செய்பவர்களுடன் சேரவும் மாட்டார்கள் தானும் சிவயோகம் செய்ய மாட்டார்கள். மதுவை அருந்துபவர்கள் உண்மை கருத்துக்கள் எதையும் அறிந்து கொள்ளும் தகுதி இல்லாதவர்கள் ஆகின்றனர்.
திருமந்திரம் - 329
மயக்கும் சமய மலமன்னு மூடர்
மயக்கு மதுவுண்ணும் மாமூடர் தேறார்
மயக்குறு மாமாயை மாயையின் வீடு
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே
விளக்கம்:
சமயத்தின் பெயரால் மது அருந்துபவர்கள் மூடர்கள். மயக்கம் தரும் மதுவை அருந்தும் மூடர்கள் எதையும் ஆராய்ந்து அறியும் திறன் இல்லாதவர்கள். உலகப்பற்று என்னும் பெரும் மயக்கத்திலுருந்து விடுபட்டு இறைவனை அடைய வேண்டும் என்ற தெளிவு இருப்பவர்கள் கூட சமயவழியில் சென்று மது அருந்தி வழிபட்டால் உலக மயக்கம் தெளிந்து இறைவனை அடையலாம் என்று எண்ணி மது அருந்துபவர்களை மது அன்றே மயக்கமடையச்செய்யும். மது கஞ்சா போன்ற போதை தரும் பொருட்களை இறைவனை அடைய வேண்டும் என்று எண்ணி சமயத்தின் பெயரால் அருந்தினாலும் அந்த போதை மயக்கம் மேலும் அவர்களை மூடர்களாக்கி மயக்கத்திலேயே வைத்திருக்கும். ஒரு மயக்கத்தினால் இன்னொரு மயக்கம் தெளியாது. இன்னும் மயக்கம் அதிகமாகவே ஆகும்.
திருமந்திரம் - 330
மயங்குந் தியங்கும் கள்வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
முயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே
விளக்கம்:
மதுவானது குடிப்பவரின் புத்தியில் தடுமாற்றத்தையும் மனச்சஞ்சலத்தையும் ஏற்படுத்தும். உண்மை பேசுவதை தடுத்து பொய் பேச வைக்கும். மது அருந்துபவர்கள் இன்பத்துக்காக பொதுமகளிரை நாடி அவர்களிடம் மயங்கி இருப்பார்கள். இல்லாளிடம் கிடைக்கும் இன்பமே இனிமை என்பதை அவர்கள் உணர்வதில்லை. இவர்களுக்கு ஞானத்தினால் கிடைக்கும் பேரானந்தம் ஒரு போதும் கிடைக்காது.
#aalayamselveer #thirumanthiram #kallunnamai
Негізгі бет போதைக்கு அடிமையா? திருமூலர் சித்தர் சொல்வதை கேளுங்க - கள்ளுண்ணாமை பாகம் 1 | Thirumoolar Kallunnamai
Пікірлер: 94