எது, சூரியனை அஸ்தமனம் செய்கிறது.?
யோசித்துப் பாருங்கள். அறிவியல் ரீதியாக பார்த்தால்,
சூரியனின் கதிர்கள், சுற்றும் பூமியின் ஒருபக்கத்தில் மட்டும் விழுவதால், மறுபக்கத்தில் அஸ்தமனம் போல் தோற்றம் அளிக்கும். ஆம்.
ஆனால், இங்கே நாம் பார்க்கும் உரையாடல், சராசரியான கேள்வி பதில் அல்ல, அதற்கு மறைமுகமான அர்த்தமும் இருப்பதை, நம் பூர்வாசார்யர்கள், விளக்கி இருக்கிறார்கள். இதை மனதில் வைத்து கொண்டு, யுதிஷ்டிரன் என்ன பதில் அளிக்கிறார் என்று பார்ப்போம்.
தர்மம் சூரியனை அஸ்தமனம் செய்கிறது.
தர்மமா?
சற்று குழப்பமாகத் தோன்றலாம், கூர்ந்து கவனித்தால், நிச்சயமாக புரிந்து கொள்ளலாம்.
முதலில் தர்மம் என்பது என்ன? தர்மம் என்பது சுபாவத்தை குறிக்கும். ஒரு பொருளின் குணம்.
உதாரணத்திற்கு சர்க்கரை எடுத்து கொள்வோம். இனிப்பாக இருப்பது சர்க்கரையின் குணம். அதனால் அதுவே சர்க்கரையின் தர்மம் ஆகிறது. அதே போல், எரிய வைப்பது, நெருப்பின் குணம். அதுவே அதன் தர்மம் ஆகிறது.
அதாவது, எந்த இயற்கை குணம் ஒரு பொருளை அந்த பொருளாக அடையாளப்படுத்துகிறதோ, அது தான் அதன் தர்மம்.
.
அதே கண்ணோட்டத்தில் இந்த பதிலையும் பார்த்தால், உதிப்பதும் அஸ்தமிப்பதும் தான் சூரியனின் தர்மம் ஆகும். அதன் சுபாவம் ஆகும். அதன் இயற்கை குணம் ஆகும்.
சரி. மேலோட்டமான அர்த்தத்தை பார்த்து விட்டோம். இப்போது இதற்கு பின்னால் இருக்கும் ஆழ்ந்த கருத்தை பார்ப்போம்.
சூரியன் என்பது ஆத்மாவை குறிக்கும், ஏன்? சூரியனுக்கு சம்ஸ்கிருதத்தில் ஆதித்யா என்று பெயர். “ஆதத்தே இதி ஆதித்ய:” என்று கூறும் வழக்கம் உண்டு.
அதாவது ஆதத்தே என்றால் கிரஹிக்கும் தன்மை.
ஆத்மா, ஒரு உடலை எடுத்து கொண்டு, இந்திரியங்கள் வாயிலாக, தன்னை சுற்றி இருக்கும் அனைத்தையும் கிரஹிக்கும்படியால், அதை ஆதித்யா என்றும் அழைக்கலாம்.
அடுத்ததாக அஸ்தமனம். அஸ்தமனம் என்பது, நமது இலக்காண, மோக்ஷத்தை குறிக்கும். ஏன் அப்படி தொடர்பு படுத்த வேண்டும்?
அஸ்தம் என்கிற வார்த்தையை, முண்டகோபநிஷத் உபயோகப் படுத்துவதை நாம் பார்க்க முடியும்.
यथा नद्यः स्यन्दमानाः समुद्रेऽस्तं गच्छन्ति नामरूपे विहाय।
तथा विद्वान् नामरूपाद् विमुक्तः परात्परं पुरुषमुपैति दिव्यम् ॥
எப்படி, பெயர்களை கொண்ட நதிகள், சமுத்திரம் ஆகிய இலக்கை அடைந்த பிறகு, தன் பெயர்களை இழக்கிறதோ, அதே போல் ஆத்மாக்கள், தன் இலக்காகிய மோக்ஷத்தை எட்டிய பிறகு, பெயர்களையும் இழந்து விடும், ரூபங்களையும் இழந்து விடும். அதனால் அஸ்தம் என்கிற வார்த்தையை மோக்ஷத்துடன் சம்பந்தப்படுத்தி இருக்கிறார்கள், நம் பூர்வாச்சார்யர்கள்.
இந்த வார்த்தைகளின் விளக்கத்தை வைத்துக்கொண்டு, கேள்வியை மறு உருவாக்கம் செய்தால், ஆத்மாவிற்கு எது மோக்ஷத்தை அளிக்கிறது?
தர்மம் ஆத்மாவிற்கு மோக்ஷத்தை அளிக்கிறது. தர்மம் என்ற வார்த்தைக்கு சுபாவம் என்ற அர்த்தம் இருப்பதை பார்த்தோம், தர்மத்திற்கு நன்கு அறியப்பட்ட மற்றுமொரு அர்த்தமும் உண்டு - கடமைகள்.
நம்மை உடல் என்று கருதிக்கொண்டால், நமக்கு சில கடமைகள் உண்டு, , தாயாக, தந்தையாக, மகனாக, மகளாக இன்னும் பல, இந்த கடமைகள், பொருள் சார்ந்த தர்மம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த பொறுப்புகளை நிறைவேற்றும் கடமை நம்மிடம் உண்டு, இதுவே கர்ம யோகம், கீதையின் படி, மோக்ஷத்திற்கான ஒரு வழி.
அதே போல், நம்மை ஆத்மா என்று கருதிக்கொண்டால், இறைவனிடம் அர்ப்பணிப்புடன் இருப்பதே நம் கடமை. இதுவே ஆன்மீக தர்மம் ஆகும்.
ஆன்மீக தர்மமான பக்தி யோகமும், மோக்ஷத்திற்கான பாதை என்று கீதை கூறுகிறது.
ஆகவே, தர்மம் மோக்ஷத்தை அளிக்கிறது என்பதற்கு இதுவே பொருள்.
ஆனால்,
தர்மத்திற்கு மற்றும் ஒரு சுவாரஸ்யமான அர்த்தமும் உண்டு. இதுவரை தர்மத்தை உபாயம் என்கிற வழியாக பார்த்தோம், எதற்கான வழி? இறைவனாகிய இலக்கை அடைய வழி. கர்ம யோகம் பக்தி யோகம் போன்ற வழிகள்.
இந்த வழிகள் மூலம் யாரை அடைய முடியும்? இறைவனை அடைய முடியும், அவரை உபேயம், நம் இலக்கு, என்று நம் வேதங்கள் கருதுகிறது.
அதாவது உபாயம் என்கிற வழியின் மூலம் உபேயம் என்கிற இலக்கை அடைய முடியும்
ஆனால், கீதையின் கடைசி அத்தியாயத்தில், தர்மங்கள் அனைத்தையும் விவரித்திவிட்டு,
sarva-dharman parityajya, mam ekam saranam vraja
எல்லா தர்மத்தை கை விட்டு, என்னை சரணாகதி செய்.
aham tvam sarva-papebhyo moksayisyami ma sucah
நான் மோக்ஷத்தை அளிப்பேன், கவலைப்படாதே.
இதுவரை தர்மம் மோக்ஷத்தை அளிக்கும் என்று கூறிவிட்டு, கடைசியில் ஒரு குறுக்கு வழி. சரணாகதி செய், மோக்ஷத்தை அளிப்பேன் என்கிறார் கண்ணன்.
எப்படி?
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம். கண்ணனே தர்மம், அவன் வேறு அல்ல தர்மம் வேறு அல்ல, என்கிறது பாகவதம்.
Ko dharma sarvah dharmanaam , Bhavath paramo matah ?
அனைத்து தர்மத்திலும் தலை சிறந்த தர்மம் எது என்று குருக்ஷேத்திர போரில், அம்பு படுக்கையில் இருக்கும் பீஷ்மரிடம் யுதிஷ்டிரன் கேட்க, பீஷ்மர் பதில் அளிக்கிறார்,
Anaadi-nidhanam vishnum sarvaloka-mahesvaram
ஆதியும் இல்லாமல் அந்தமும் இல்லாமல் இருக்கும் அந்த விஷ்ணுவே தலை சிறந்த தர்மம்.
ஆகவே நம் வேதங்கள், அவனை இலக்காகிய உபேயம் என்று மட்டும் கருதவில்லை.
அவனை அடைய உபாயம் என்கிற வழியாகவும் அவனே இருக்கிறான், என்று, நம் வேதங்கள் தெரிவிக்கிறது.
ஆக உபாயமும் அவனே உபேயமும் அவனே.
இது தான் யக்ஷ பிரஷணத்தின் மூன்றாம் பதிலான தர்மம் சூரியனை அஸ்தமனம் செய்கிறது என்பதின் விளக்கம் ஆகும்
நான்காவது கேள்வி பதில் விளக்கத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இதே போல் ஆன்மீக ரீதியான கருத்துகளைக்காண, Palm Leaf Writings என்கிற நம் சேனலை யூடியூபில் subscribe செய்யவும்.
நன்றி
Негізгі бет யக்ஷ ப்ரஷ்னம் - கேள்வி 3/124 - ஆத்மாவிற்கு எது மோக்ஷத்தை அளிக்கிறது? (சூரிய அஸ்தமனம்)
Пікірлер: 8