சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுவளர்ச்சி திட்டம்
தென் தமிழகத்திற்காக இயக்கப்படும் விரைவு ரயில் சேவைகளின் முனையாக செயல்படும் எழும்பூர் ரயில் நிலையம் 2.5 ஏக்கர் பரப்பளவில் ஹென்றி இர்வின் மற்றும் இ.சி.எச்.பர்ட் என்ற ஆங்கிலேய கட்டிடக்கலை நிபுணர்களால் இந்தோ-சாரசாணிக் பாணியில் வடிவமைத்து, ஸ்ரீசாமிநாதபிள்ளை என்ற தமிழ் ஒப்பந்ததாரரால் ரூ.17 லட்சம் மதிப்பில் 1905-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதனுடைய கட்டுமான பணி தொடங்கப்பட்டு 1908-ம் ஜூன் மாதம் 11-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த எழும்பூர் ரயில் நிலையம் மக்களுடைய பயன்பாட்டிற்கு வந்தபோது போட் மெயில் என்ற முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்ட போது இதனுடைய முனைய கட்டிடமானது இரண்டு அடுக்குகளாக 300 அடி நீளமும், 71 அடி அகலம் கொண்டதாகவும், முனைய கட்டிடம் ஒட்டிய முதலாவது நடைமேடை 895 அடியாகவும், இரண்டாவது நடைமேடை 700 அடியாகவும், மூன்றாவது நடைமேடை 650 அடியாகவும் இருந்தது. இந்த 3 நடைமேடைகளை இணைக்கும் விதமாக ஒரு நடைமேம்பாலம் மற்றும் 602 அடி நீளத்திற்கு மேற்கூரைகளும் அமைக்கப்பட்டது. சென்னை கடற்கரை தாம்பரம் வரையிலான ரயில்வே வழித்தடம் மின்மயமாக்கப்பட்டவுடன் இந்த எழும்பூர் ரயில் நிலையத்தில் 1935-ம் ஆண்டு ஒரு சிக்னல் கட்டுப்பாட்டு அறை திறந்து வைக்கப்பட்டது. பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப 1992 -2004 காலப்பகுதிகளில் சென்னை கடற்கரை தாம்பரம் ரயில்வே வழித்தடம் ஆனது மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகலப் பாதையாக மாற்றப்பட்ட போது இந்த எழும்பூர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் சேவைக்காக புதிதாக ஒரு நடைமேடை 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் செயல்பாட்டிற்கு வந்தது. அதேபோல் 2004-ல் பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கமாக இந்த ரயில் நிலையத்திற்கான இரண்டாவது நுழைவாயில் கட்டிடத்தின் கட்டுமான பணி தொடங்கப்பட்டு ரூ.11.53 கோடி மதிப்பில் 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இந்த ரயில் நிலையத்தின் மின்சார தேவையினை கணிசமான முறையில் குறைப்பதற்காக 2, 4, 6, 7-வது நடைமேடைகளின் மேற்கூரைகளில் 250 கி.வா திறன்கொண்ட சூரியமின் தகடுகள் பொருத்தி 2018-லிருந்து மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் பிறகு இந்த எழும்பூர் ரயில் நிலையத்தை ரயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி மதிப்பில் புதுப்பித்தல் பணிக்காக ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து இதற்கான பணிகள் 2019-ல் தொடங்கப்பட்டது. அதன்படி இந்த எழும்பூர் ரயில் நிலைய முனைய கட்டிடத்தின் தரைதளத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை, மேல் வகுப்பு காத்திருப்பு அறை மற்றும் இரண்டாம் வகுப்பு காத்திருப்பு அறை என மூன்று விதமான காத்திருப்பு அறைகளில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவான கழிவறைகள், தாய்மார் பாலூட்டும் அறை மற்றும் ஆடை மாற்றும் அறை போன்ற வசதிகள் செய்யப்பட்டது. முனைய கட்டிடத்தின் முதலாவது தளத்தில் குளிரூட்டப்பட்ட தங்குமிடம் மற்றும் 16 ஓய்வறைகள் புதுப்பிக்கப்பட்டது. மேலும் முனைய கட்டிடத்தில் தரைதளத்தில் இருந்து முதலாவது தளத்திற்கு எளிதாக செல்வதற்கு ஏதுவாக மூன்று மின்தூக்கிகள் அமைக்கப்பட்டது. இந்த ரயில் நிலைய பொதுதளத்தில் இருந்து நடைமேம்பாலம் மூலமாக எளிதாக நடைமேடைகளுக்கு செல்வதற்காக மேற்குபுறமாக உள்ள நடைமேம்பாலத்தில் காந்தி இர்வின் சாலை பக்கமாக ஒரு நகரும் படிக்கட்டு வசதியும், 7-வது நடைமேடையில் ஒரு நகரும் படிக்கட்டு வசதியும், 8 & 9-வது நடைமேடைகளை சேர்த்தமாதிரி ஒரு நகரும் படிக்கட்டு வசதியும், கிழக்கு நடைமேம்பாலத்தில் 10 & 11-வது நடைமேடைகளை சேர்த்தமாதிரி ஒரு நகரும் படிக்கட்டு வசதியும் செய்யப்பட்டது. மேலும் 5,7,8 & 9-வது நடைமேடைகளின் தரைப்பகுதிகளில் கிரானைட் பதிக்கப்பட்டு, சில நடைமேடைகளில் மேற்கூரைகள் அமைக்கப்பட்டு, இந்த ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் சேவைக்காக புதிதாக 12-வது நடைமேடை அமைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த ரயில் நிலைய முனைய கட்டிடத்தின் முகப்பு பகுதியில் அலங்கார மின்விளக்குகள் பொருத்தப்பட்டது. எழும்பூர் ரயில் நிலையம் 2021 - 2022 கான நிதியாண்டில் ரூ.125 கோடியும், 2022 - 2023 கான நிதியாண்டில் ரூ.525.96 கோடியும் வருமானத்தை ஈட்டியது. இந்த ரயில் நிலையத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த ரயில்வே வாரியத்தின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.734 கோடியே 91 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு, 1,35,406 ச.மீ பரப்பளவிற்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த மேம்பாட்டு திட்டத்திற்கான கட்டுமான ஒப்பந்தத்தை ஹைதராபாத்தை சேர்ந்த DEC Infrastructure and Projects India Pvt Ltd என்ற நிறுவனமும், இந்த திட்டத்திற்கான திட்டமேலாண்மை ஒப்பந்தத்தை மும்பையை சேர்ந்த Tata Consulting Engineers Ltd என்ற நிறுவனம் ரூ.14.56 கோடி மதிப்பில் எடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்த காலமாக 36 மாதங்கள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டப்படி காந்தி இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதிகளில் 4 அடுக்குகள் கொண்ட முனைய கட்டிடங்களும், 6 அடுக்குகள் கொண்ட பன்னடுக்கு வாகன நிறுத்த கட்டிடங்களும், வணிக வளாகங்களும், பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கமாக 3 அடுக்குகள் கொண்ட சரக்கு அலுவலகமும், காந்தி இர்வின் சாலை பக்கமாக புதிய ரயில்வே குடியிருப்பு மற்றும் துணைமின் நிலையமும், ரயில் நிலைய நடைமேடைகளுக்கு மேற்புறமாக 72மீ அகலத்திற்கான புறப்பாடுக்கான ஒரு பொதுத்தளமும், 36மீ அகலத்திற்கான வருகைக்கான ஒரு பொதுத்தளமும், 12மீ அகலத்திற்கான வருகைக்கான ஒரு நடைமேம்பாலமும், 6மீ அகலத்திற்கான சரக்குகளை கையாள்வதற்கான ஒரு நடைமேம்பாலம் மற்றும் பெரியளவிலான மேற்கூரைகளுடன் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் & கழிவுநீரகற்றல் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, மாநகர் போக்குவரத்து கழகம், பசுமை குழு, பாரம்பரிய குழு,தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்ற அமைப்புகள் இந்த திட்டத்திற்கான முழு ஒத்துழைப்பை வழங்கியள்ளனர்.
Негізгі бет Ойын-сауық Chennai Egmore Railway Station Redevelopment Project | சென்னை எழும்பூர் மறுவளர்ச்சி திட்டம் 🛤️🚉🚂🚇
Пікірлер: 9