நாலாயிர திவ்யப் பிரபந்தம்
பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதி
மூன்றாம் ஆயிரம்
இன்றே கழல்கண்டேன்* ஏழ்பிறப்பும் யான்அறுத்தேன்
பொன்தோய் வரைமார்பில் பூந்துழாய்,* - அன்று
திருக்கண்டு கொண்ட* திருமாலே,* உன்னை
மருக்கண்டு கொண்டுஎன் மனம்
பதவுரை
பூத்துழாய் - திருத்துழாயை
அன்று - கடல்கடைந்த வக்காலத்தில்
திரு - பெரியபிராட்டியார்
கண்டு கொண்ட - அநுபவிக்கும்படியாக பெற்ற
திருமாலை - லக்ஷமீநாதனே!
விளக்க உரை
எம்பெருமானை விசேஷணங்களுடனே கண்டேனென்றார் கீழ்ப்பாட்டில், அவனைக் கண்டபோதே விரோதிவர்க்கமெல்லாம் வேரற ஒழிந்தன வென்கிறார் இப்பாட்டில். பிராட்டிதானே ஆசைப்பட்டுவந்து ஏறும்படியான விலக்ஷணமான திருமார்புபடைத்த திருமாலே! எனது மனமானு உன்னிடத்திலே பொருந்தி ஸேவிக்கப் பெற்றதனால், இதுவரையில் பாழே கழிந்த பல பிறவிகளுக்குள்ளே இன்றே உனது திருவடிகளை ஸேவிக்கப்பெற்றவனானேன், உன்னுடைய அநுபவத்திற்கு விரோதியாயிருந்த ஐந்ம பரம்பரைகளையும் இன்றோடு அறுத்துவிட்டேன், (அதாவது -இனிமேல் நமக்கு நித்யாநந்தமே யொழியப் பிறவியில்லையென்று நிச்சயித்துவிட்டேன் என்கை.) கீழ்ப்பாட்டில் ‘பொன்மேனிகண்டேன்‘ என்று திருமேனியிலே வாய்வைத்தார், சிறுகுழந்தைகள் தாயின்முலையிலே வாய்வைப்பதுபோல சேஷபூதர் இழியுந்துறை திருவடியே யாகையாலே முந்துறமுன்னம் திருமேனியில் வாய்வைத்தோமோ யென்று அநுதபித்தவர்போல இதில் “இன்றே கழல் கண்டேன்“ என்கிறார் என்னலாம். பொன்தோய்வரைமார்பில் - ‘பொன்‘ என்று பிராட்டியைச் சொல்லிற்றாப், ‘பிராட்டி வந்து சேர்ந்த வரைமார்பிலே‘ என்று பொரு கொள்ளலாமாயிலும், இந்த வாக்கியத்திலேயே திருக்கண்டுகொண்ட“ எனவருதலால், ‘பொன் தோய்‘ என்பதற்குப் பொன்மயமான ஆபரணங்கள் தோயப்பெற்ற எனப் பொருள்கொள்வதே பொருந்தும். பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் “பொன்தோய் இத்யாதி“ என்று ப்ரதீகமெடுத்து - “பிராட்டிதானே ஆசைப்பட்டு வந்து ஏறும்படியான மார்புடைத்த ச்ரிய பதியே!“ என்று பொருளருளிச் செய்திருப்பது ‘பொன்தோய்‘ என்றதன் பொருளன்று, பொன்தோய்வரை மார்பில் பூத்துழாய் திருக்கண்டு கொண்ட திருமாலே“ என்றவளவுக்கு அருளிச்செய்த தாத்பர்யமாம் அது. திருத்துழாயணிந்த திருமார்வையுடையனாய்த் திருப்பாற்கடல் கடைந்தபோது பிராட்டியானவன் அத்திருமார்பிலே வந்து சேர்ந்து அத்திருத்துழாயை அநுபவிக்கப்பெற்றாளென்ற விதனால், பிராட்டிதானே ஆசைப்பட்டுவந்து மேல் விழும்படியான போக்ய்யை யுடையவன் என்பது பெறப்படும். கடல் கடைந்தகாலத்துத் திருமார்பிலே திருவாபரணங்களணிந்து கொண்டிருந்தமைபற்றிப் பொன்தோய் என்று திருமார்புக்கு அடைமொழி கொடுக்கப்பட்டது. மார்பிலிருந்த பூத்துழாயைத் திருவானவள் கண்டு கொண்டாளென்றால் அவள் மார்பிலே வந்து சேர்ந்தாளென்றதொமென்கை.
English Translation
Your gold-ornamented mountain-like chest, -O Adorable Lord of Sri!, -earned for you her tualsi garland in the yore, With my heart brimming with love for you, I too sought your lotus feet. Now my seven births are destroyed.
கழல்தொழுதும் வாநெஞ்சே!* கார்க்கடல்நீர் வேலை,*
பொழில்அளந்த புள்ஊர்திச் செல்வன்,* - எழில்அளந்துஅங்கு
எண்ணற்குஅரியானை* எப்பொருட்கும் சேயானை,*
நண்ணற்கு அரியானை நாம்
பதவுரை
வேலை - கரையையுடைத்தான
பொழில் - பூமியை
அளந்த - அளந்து கொண்டவனும்
புள் ஊர்தி - கருடனை வாஹநமாக வுடையவனும்
செல்வன் - ஐச்வரிய முடையவனும்
விளக்க உரை
கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய அழகிலே தோற்ற ஆழ்வார் தம் திருவுள்ளத்தை நோக்கி ‘அவன் திருவடிகளிலே நாம் அடிமைசெய்து வாழும்படி அநுகூலிக்கப் பாராய்‘ என்கிறார். கடல் சூழ்ந்த உலகங்களையெல்லாம் அளந்தவனும், தனது பெருமேன்மைக் குறுப்பாகப் பெரிய திருவடியை வாஹநமாகக் கொண்டிருப்பவனும், உபய விபூதி நாயகத்வமாகிற ஐச்வரியம் மிக்கவனும், தன்னழகை இவ்வளவென்று பரிச்சேதித்து நெஞ்சால் நினைத்துப் பார்க்கவும் முடியாதபடி அழகு விஞ்சியிருப்பனும், எந்த வஸ்துவோடும் ஒப்பிட்டுச் சொல்ல வொண்ணாதபடி எல்லா வஸ்துக்களுக்கும் அப்பாற்ப்பட்ட வைலக்ஷண்யத்தையுடையவனும், எப்படிப்பட்டவர்க்கும் ஸ்வயத்நத்தால் கிட்டுகைக்கு அருமையா யிருப்பவனுமான பரமபுருஷனுடைய திருவடிகளைத் தொழுவோம், வா நெஞ்சமே! என்றாராயிற்று. “எழிலளந்தும் எண்ணற்கியானை“ என்றும் “எழிலளந்தங்கு எண்ணற்கரியானை“ என்றும் பாடபேதங்கள். (அங்கு -அசைச்சொல்).
English Translation
With beauty beyond description, He is afar from all and hard to reach, He measured the ocean-girdled Earth. He rides the Garuda bird. He is the husband of Dame Wealth. Let us worship the feet, come, O Heart!
பேயாழ்வார் திருவடிகளே சரணம்
Негізгі бет திவ்யப் பிரபந்தம் - இன்றே கழல் கண்டேன்...
Пікірлер: 2