நந்திகேஸ்வரர் கோயில் தேனூர்
மூலவர்: நந்திகேஸ்வரர்
அம்பாள்: மகாசம்பத் கௌரி
ஊர்: தேனூர்
மாவட்டம்: பெரம்பலூர்
தலவரலாறு
ஒரு முறை சாபம் பெற்ற காமதேனு, பூலோகம் வந்து இத்தல இறைவனிடம் விமோசனம் கேட்டு வழிபாடு செய்தது. தினமும் தன்னுடைய பாலை சொரிந்து வழிபட்டதால் இத்தலம் ‘காமதேனூர்’ என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி ‘தேனூர்’ என்றானதாக சொல்லப்படுகிறது. ‘ இதுதவிர இன்னொரு பெயர்க்காரணமும் இருக்கிறது. இத்தல சிவலிங்கத் திருமேனி இருந்த மரத்தின் மீது இருந்து தேன் வடிந்து சிவலிங்கத்தின் மீது பட்டதால், ‘தேனூர்’ பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.
ஆலய அமைப்பு :
இந்த ஆலயத்திற்கு கிழக்கு மற்றும் தெற்குத் திசையில் எளிய நுழைவு வாசல்கள் அமைந்துள்ளன. இவை சுவாமி, அம்பாள் சன்னிதிக்கு எதிரில் காட்சியளிக்கின்றன. கிழக்கில் பலிபீடம், கொடிமரம், நந்திதேவர் காட்சிதர, எளிய ராஜகோபுரம் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும், அழகிய தூண்களைக் கொண்டு விளங்கும் மகாமண்டபம் இருக்கிறது. மகா மண்டபத்தின் விதானத்தில் சரபேஸ்வரர் புடைப்புச் சிற்பம் கண்களைக் கவரும் வகையில் வடிக்கப்பட்டிருக்கிறது. கருவறை முன்மண்டப முகப்பில் தேனூர் வரகவியின் பாடல்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. அதற்குள் நுழைந்ததும் அம்மன் சன்னிதி தெற்கு முகமாய் காட்சிதர, கருவறை சுற்றில் ஐந்து அம்மன்களின் திருவுருவங்கள் கோஷ்ட தெய்வங்களாக அமைக்கப்பட்டுள்ளன. நடுநாயகமாக கிழக்கு நோக்கிய நந்திகேஸ்வரர் சன்னிதி துவார பாலகர்களுடன் காணப் படுகிறது. கருவறைச்சுற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரது வடிவங்கள் இருக்கின்றன.
நிருதி மூலையில் நிருதி கணபதி, மகான் குருமூர்த்தி ஜீவ சமாதி, கிருஷ்ணர், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான், பாதாள லிங்கேஸ்வரர், காசி விஸ்வநாதர், தீர்த்தக்கிணறு, நடராஜர், நவக்கிரகங்கள், சந்திரன், சூரியன் என அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளன. ஆலய கருவறையில் நந்திகேஸ்வரர் எளிய வடிவில் கிழக்கு முகமாய் காட்சியளிக்கிறார். இறைவனின் வடிவம் சிறிதானாலும், அருள் ஆற்றல் மிகப்பெரியதாக உள்ளது. தன்னை வழிபடும் அடியாரின் பெயரையே தனக்குச் சூட்டிக்கொண்டு, தன் பக்தரைக் கவுரவிக்கும் குணம் கொண்டவர் சிவபெருமான். அந்த வகையில் தன்னை வழிபட்டுப் பேறுபெற்ற நந்தியின் நினைவைப் போற்றும் விதமாக, இத்தல ஈசன் ‘நந்திகேஸ்வரர்’ என்ற திருப்பெயரோடு அருள் வழங்குகின்றார்.
இத்தலத்தில் சக்தி சொரூபமாக வீற்றிருக்கும் அன்னை, ‘மகா சம்பத்கவுரி’ என்ற திருநாமத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றாள். நான்கு கரங்கள் கொண்டிருக்கும் அன்னையானவள், மேல் இரு கரங்களில் மலர்களைத் தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரையோடும் காணப்படுகிறாள். அன்னையின் திருமேனியில் பட்ட சந்தனப் பிரசாதமே, தேனூர் வரகவியின் சூலை நோய்க்கு அருமருந்தாக அமைந்தது. இன்றும் தீராத நோயுற்றவர்களுக்கு அன்னையின் பிரசாதம் தான் அருமருந்தாக அமைகிறது என்று இந்த ஊர் மக்கள் பெருமையோடு தெரிவிக்கின்றனர்.
பிராத்தனை
இத்தலத்தில் வீற்றிருக்கும் சுவாமியும், அம்பாளும் தங்களை வழிபடுபவர்களுக்கு தீராத வயிற்று வலி, குடல் நோய், சூலை நோய் நீக்கும் கண்கண்ட தெய்வங்களாக விளங்குகின்றனர். நோயுற்றவர்கள் தாங்கள் சாப்பிடும் மருந்துகளோடு, அன்னைக்கு அபிஷேகம் செய்த சந்தனத்தை சிறிதளவு நீரில் கலந்து, நம்பிக்கையோடு குடித்து வந்தால், அவர்களின் நோய் பூரணகுணமாகும் என்பது ஐதீகம். அது இந்தப் பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகவும் இருக்கிறது.
சரபேஸ்வரர் :
இந்த ஆலயத்தின் மகா மண்டபத்தின் நடுப்பகுதி விதானத்தில் சிவபெருமான் மான், மழுவுடன் சரப பட்சியாக தோன்றி நரசிம்மரை அடக்கும் காட்சி, சரப பறவையை நரசிம்மரை வணங்கும் காட்சி ஆகிய படைப்புகள் உள்ளன. நட்சத்திர வடிவ விளிம்பும், அதனைச் சுற்றி சூரியன் - சந்திரன் மற்றும் தேவர்கள் வணங்கும் காட்சி தெரிகின்றது. இதன் இடதுபுறம் பிரம்மன் நான்கு தலைகளுடன் அட்சயமாலை மற்றும் கெண்டி போன்றவற்றை தன் கரங்களில் தாங்கிய கோலம் அமைந்துள்ளது. இந்த அழகிய புடைப்புச் சிற்பம் அரிதான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இவரை பெண்கள் வழிபட தங்கள் கணவர் தீய வழியில் சென்றால் அவர்கள் திருந்தி வாழ்வார்கள்.
தேனூர் வரகவி :
அறுபத்துமூவர் வரலாற்றைக் கூறுவது சேக்கிழாரின் பெரிய புராணம். அதுபோல முருகப்பெருமானின் 63 அடியார்களை வரிசைப்படுத்தி ‘சேய்தொண்டர் புராணம்’ என்ற நூலை எழுதி இயற்றியவர் தான் தேனூர் வரகவி சொக்கலிங்கனார். இவரின் சொந்த ஊர் தேனூர். பொருளாதாரத்திற்காக மலேசியாவுக்குச் சென்ற இவரை இறைவன் ஆட்கொள்ள நினைந்து திருநாவுக்கரசரைப் போல, சூலை நோயைத் தந்தார். பல்வேறு மருத்துவம் பார்த்தும் குணம் பெறாத நிலையில், தேனூரில் வாழ்ந்த இவரின் பெரியப்பா சீயாளிப்பிள்ளை, இத் தலத்து அம்பிகைக்கு அபிஷேக ஆராதனை செய்து, சந்தனக் காப்பிட்டு வணங்கினார். அந்தப் பிரசாதத்தை மலேசியாவிற்கு அனுப்பினார். அதனை நீரில் கரைத்து உட்கொண்ட சொக்கலிங்கனாருக்கு, சூலை நோய் பூரண குணமானது. அதோடு அந்தப் பிரசாதம், அவருக்கு ஞானத்தையும், தெய்வ கடாட்சத்தையும் அருளியது. அவருக்கு ஏற்பட்ட ஞானத்தால் உருவானதே ‘சேய் தொண்டர் புராணம்.’ இவர் எண்ணற்ற பாடல்களும் பாடியுள்ளார்.
அமைவிடம்
துறையூரில் இருந்து எதுமலை வழியாக திருச்சி செல்லும் வழியில் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து மண்ணச்சநல்லூர்,எதுமலை வழியாக துறையூர் செல்லும் பேருந்தில் பயணம் செய்து இத்தலம் அடையலாம்.
கோயில் Google Map Link
maps.app.goo.gl/LqBXWuEQ4VxvZ...
ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
+91 9566426705
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 7994347966
if you want to support us via Google pay phone pay paytm
9655896987
Join this channel to get access to perks:
/ @mathina
- தமிழ்
Негізгі бет தேனூர் நந்திகேஸ்வரர் கோயில் | தீய வழியில் செல்லும் கணவரை திருந்தி வாழ செய்யும் சரபேஸ்வரர் வழிபாடு
Пікірлер: 23