திரு அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார்
அருளிய
திருவருட்பா
ஆறாம் திருமுறை
மரணமில்லா பெருவாழ்வு
நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே
உரை:
உலகியல் வாழ்வில் இருக்கின்ற நன்மக்களே! பலகாலும் நினைந்து பலவகையாலும் உணர்ந்து மனம் நெகிழ்ந்து அன்பு மிக நிறைந்து அதனால் உள்ளத்திலிருந்து ஊற்றுப்போல் பெருகும் கண்ணீரால் உடம்பு நனைந்து அருளார் அமுதமே, நல்ல அருட் செல்வமே; ஞான நடம் புரிகின்ற அரசர் பெருமானே, என்னுடைய உரிமை நாயகனே என்று சொல் மாலைகளைத் தொடுத்து நாம் வழிபடுதற்கு வருவீர்களாக; அவ்வழிபாட்டால் நாம் மரண பயம் இல்லாத பெருமை பொருந்திய வாழ்வில் இன்பமுற வாழலாம். நான் இதனை இல்லது புனைந்து உரைக்கின்றேன் இல்லை; பொய் சொல்லவுமில்லை; சத்தியமாகச் சொல்லுகின்றேன்; பொன் வேய்ந்த சபையிலுள்ள ஞான சபையில் சிவபெருமான் எழுந்தருளும் தருணம் இதுவே என அறிவீராக.
திருச்சிற்றம்பலம்
Негізгі бет திருவருட்பா - நினைந்து நினைந்து...
Пікірлер