அகஸ்தியர் ஞானம் 5
1. கற்பமென்ன வெகுதூரம் போக வேண்டா! கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா;
சர்ப்பமென்ன நாகமதோர் தலையில்நின்று சாகாத கால்கண்டு முனை யிலேறி
நிற்பமென்று மனமுறுத்து மனத்தில்நின்று நிசமான கருநெல்லிச் சாற்றைக் காணு;
சாற்பமென்று விட்டுவிட்டால் அலைந்து போவாய்; துரியமென்ற பராபரத்திற் சென்று கூடே.
2. கூடப்பா துரியமென்ற வாலை வீடு கூறரிய நாதர்மகேச் சுரியே யென்பார்:
நாடப்பா அவள் தனையே பூசை பண்ணு: நந்திசொல்லுஞ் சிங்காரந் தோன்றுந் தோன்றும்;
ஊடப்பா சிகாரவரை யெல்லாந் தோன்றும் ஊமையென்ற அமிர்தவெள்ளம் ஊற லாகும்;
தேடப்பா இதுதேடு காரிய மாகும்; செகத்திலே இதுவல்லோ சித்தி யாமே.
3. ஆமென்ற பூர்ணஞ்சுழு முனையிற் பாராய்: அழகான விந்துநிலை சந்த்ர னிற்பார்
ஓமென்ற ரீங்காரம் புருவ மையம் உத்தமனே வில்லென்ற வீட்டிற் காணும்
வாமென்ற அவள்பாதம் பூசை பண்ணு; மற்றொன்றும் பூசையல்ல மகனே! சொன்னேன்;
நாமென்ற பரமனல்லோ முதலே ழுத்தாம் பாடினேன் வேதாந்தம் பாடினேனே.
4. பாடுகின்ற பொருளெல்லாம் பதியே யாகும் பதியில்நிற்கும் அட்சரந்தான் அகார மாகும்.
நாடுகின்ற பரமனதோங் கார மாகும் நலம் பெரிய பசுதானே உகாரமாகும்;
நீடுகின்ற சுழுமுனையே தாரை யாகும்; நின்றதோர் இடைகலையே நாதவிந்தாம்:
ஊடுகின்ற ஓங்கார வித்தை யாகும் ஒளியான அரியெழுத்தை யூணிப் பாரே.
5. ஊணியதோர் ஓங்காரம் மேலு முண்டே உத்தமனே சீருண்ட வூணிப்பாரே;
ஆணியாம் நடுநாடி நடுவே மூட்டும் ஆச்சரிய வெழுத்தெல்லாம் அடங்கி நிற்கும்
ஏணியா யிருக்குமடா அஞ்சு வீடே ஏகாந்த மாகியவவ் வெழுத்தைப் பாரு:
தோணிபோற் காணுமடா அந்த வீடு சொல்லாதே ஒருவருக்குந் துறந்திட்டேனே.
6. துறந்திட்டேன் மேல்மூலங் கீழ்மூ லம்பார்: துயரமாய் நடுநிலையை யூணிப் பாராய்:
அறைந்திட்டேன் நடுமூலம் நடுநா டிப்பார்: அப்பவல்லோ வரைதாக்கும் தாரை காணும்:
உறைந்திட்ட ஐவருந்தான் நடனங் காணும் ஒளிவெளியும் சிலம்பொலியு மொன்றாய்க் காணும்;
நிறைந்திட்ட பூரணமு மிதுதா னப்பா! நிசமான பேரொளிதான் நிலைத்துப் பாரே:
7. சும்மா நீ பார்க்கையிலே மனத்தை யப்பா சுழுமுனையிலோட்டியங்கே காலைப் பாராய்:
அம்மாநீ தேவியென்று அடங்கிப் பாராய்: அப்பவல்லோ காயசித்தி யோகசித்தி:
உம்மாவும் அம்மாவும் அதிலே காணும் ஒருமனமாய்ச் சுழுமுனையில் மனத்தை யூன்று:
நம்மாலே ஆனதெல்லாஞ் சொன்னோ மப்பா! நாதர்களிலிதையாரும் பாடார் காணே!
8. காணுகின்ற ஒங்கார வட்டஞ் சற்றுக் கனலெழும்பிக் கண்ணினிலே கடுப்புத் தோன்றும்:
பூணுகின்ற இடைகலையில் பரம்போ லாடும் பொல்லாத தேகமென்றால் உருகிப் போகும்
ஆணவங்களான வெல்லா மழிந்து போகும் அத்துவிதத் துரியாட்ட மாடி நிற்கும்.
ஊணியதோ ரெழுத் தெல்லாந் தேவி யாகும்: ஓங்காரக் கம்பமென்ற உணர்வு தானே.
9. உணர்வென்றாற் சந்திரனி லேறிப் பாவி ஓடியங்கே தலையென்ற எழுத்தில் நில்லே;
அணுவென்றால் மனையாகுஞ் சிவனே யுச்சி அகாரமென்ன பதியுமென்ன சூட்ச மாகும்.
கணுவென்ன விற்புருவ மகண்ட வீதி: கயிலாய மென்றதென்ன பரத்தின் வீடு
துணுவென்ற சூரியன்றன் நெருப்பைக் கண்டு தூணென்ற பிடரிலே தூங்கு தூங்கே.
10. மூவெழுத்தும் ஈரெழுத்து மாகி நின்ற மூலமதை யறிந்துரைப் போன் குருவுமாகும்;
ஊவெழுத்துக் குள்ளேதா னிருக்கு தப்பா உணர்வதுவே கண்டறிந்தோன் அவனே ஆசான்;
யவாருக்குந் தெரியாதே அறிந்தோ மென்றே அவரவர்கள் சொல்வார்க் ளறியா மூடர்:
தேவரோடு மாலயனுந் தேடிக் காணார் திருநடனங் காணமுத்தி சித்தியாமே.
11. ஈரெழுத்து மோரெழுத்து மாகி யாங்கே இயங்கிநிற்கும் அசபையப்பா மூலத்துள்ளே
வேரெழுத்தும் வித்தெழுத்தும் இரண்டுங் கொண்டு வித்திலே முளைத்தெழுந்து விளங்கி நிற்கும்
சீரெழுத்தை யூணிநல்ல வாசி யேறித் தெரு வீதி கடந்தமணி மண்டபத்துச்
சாரெழுத்தி னுட்பொருளாம் பரத்தை நோக்கிச் சார்ந்தவர்க்குச் சித்திமுத்தி தருமே தானே.
12. ஏகமெனு மோரெழுத்தின் பயனைப் பார்த்தே எடுத்துரைத்து மிவ்வுலகி லெவரு மில்லை.
ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக் கொண்டே அறிந்தமென்பார் மவுனத்தை அவனை நீயும்
வேகாச்சா காத்தலைகால் விரைந்து கேளாய்: விடுத்ததனை யுரைப்பவனே ஆசா னாகும்;
தேகமதி லோரெழுத்தைக் காண்போன் ஞானி திருநடனங் காணமுத்தி சித்தி யாமே.
13. குருவாக உமைபாக னெனக்குத் தந்த கூறரிய ஞானமது பத்தின் மூன்று
பொருளாகச் சொல்லி விட்டேனப்பா நீதான் பொருளறிந்தாற் பூரணமும் பொருந்திக் காணே
அருளாகா திந்நூலைப் பழித்த பேர்கள் அருநரகிற் பிசாசெனவே அடைந்து வாழ்வார்
அருளாக ஆராய்ந்து பார்க்கும் பேர்கள் ஆகாயம் நின்றநிலை அறியலாமே.
அனைத்து நண்பர்களும் சித்தர்களின் ராஜ்ஜியம் KZitem சேனலை Subscribe செய்து எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
/ @sithargalinrajiyam
#அகஸ்தியர்_ஞானம் #உயிராலயம்
Негізгі бет அகஸ்தியர் ஞானம் 5
Пікірлер: 13